துணிவளர் திங்கள் துளங்கி விளங்க சுடர்ச்சுடை சுற்றி முடித்து,
பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ, ஆரிடமும் பலி தேர்வர்;
அணிவளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
மணிவளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ, இவர்மாண்பே?
கலைபுனை மானஉரி தோல்உடை ஆடை, கனல் சுடரால் இவர்கண்கள்,
தலைஅணி சென்னியர், தார்அணி மார்பர், தம்அடிகள் இவர் என்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
இலைபுனை வேலரோ, ஏழையை வாட, இடர்செய்வதோ, இவர் ஈடே?
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சுஇருள்; மாலை வேண்டுவர், பூண்பது வெண்நூல்;
நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு இடமாக நண்ணுவர், நம்மை நயந்து
மஞ்ச அடைமாளிகை, சூழ்தரு பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே?
கன மலர்க் கொன்றை அலங்கல் இலங்க கனல்தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை அணிந்து, அழகு ஆய புனிதர் கொல்ஆம், இவர் என்ன,
அனம் மலி வண்பொழில் சூழ்தரு பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ, இவர் மாண்பே?
மாந்தர்தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி வளர் சடைமேல் புனல்வைத்து
மோந்தை, முழா, குழல், தாளம் ஓர் வீணை முதிர ஓர் வாய்மூரி பாடி,
ஆந்தை விழிச் சிறு பூதத்தர், பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ, இவர் சார்வே?
நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, நெற்றிக் கண்ணால் உற்றுநோக்கி
ஆறு அது சூடி, ஆடு அரவு ஆட்டி, ஐவிரல் கோவண ஆடை
பால்தரு மேனியர், பூதத்தர், பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
ஏறுஅது ஏறியர், ஏழையை வாட, இடர் செய்வதோ இவர்ஈடே?
பொங்கு இள நாகம், ஏர் ஏகவடத்தோடு ஆமை வெண்நூல், புனைகொன்றை
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய, குழகர் கொல் ஆம், இவர் என்ன
அங்கு இள மங்கை ஓர் பங்கினர்; பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
சங்குஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச்சதிர் செய்வதோ இவர்சார்வே?
ஏவலத்தால் விசயற்கு அருள் செய்து, இராவணன் தன்னை ஈடு அழித்து,
மூவரிலும் முதல் ஆய், நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்;
யாவர்களும் பரவும் தொழில் பாச்சலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச் சிதை செய்வதோ, இவர் சேர்வே?
மேலது நான்முகன் எய்தியது இல்லை; கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்தியது இல்லை; என இவர் நின்றதும் அல்லால்
ஆல்அது மாமதி தோய்பொழில் பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
பால்அது வண்ணரோ பைந்தொடி வாடப் பழிசெய்வதோ, இவர் பண்பே?
நாணொடு கூடிய சாயினரோனும் நகுவர், அவர் இருபோதும்;
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா;
ஆணோடு பெண்வடிவு ஆயினர், பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
பூண்நெடு மார்பரோ, பூங்கொடி வாடப்புனை செய்வதோ, இவர் பொற்பே?
அகம்மலி அன்போடு தொண்டர் வணங்க, ஆச்சிராமத்து உறைகின்ற
புகைமலி மாலை புனைந்த, அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
நகைமலி தண் பொழில் சூழ்தரு காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலி தண்தமிழ் கொண்டு இவை ஏத்த, சாரகிலா வினைதானே.