எரி ஆர் மழு ஒன்று ஏந்தி, அங்கை இடுதலையே கலனா,
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய், மா நலம் வவ்வுதியே?
சரியா நாவின் வேதகீதன், தாமரை நான்முகத்தன்,
பெரியான், பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே!
பியல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி, பெய் பலிக்கு என்று, அயலே
கயல் ஆர் தடங்கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே?
இயலால் நடாவி, இன்பம் எய்தி, இந்திரன் ஆள் மண்மேல்
வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே!
நகல்ஆர்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டு, அயலே
பகலாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், பாய் கலை வவ்வுதியே?
அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால், அமரர்
புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே!
சங்கோடு இலங்கத் தோடு பெய்து, காதில் ஒர் தாழ்குழையன்,
அம் கோல்வளையார் ஐயம் வவ்வாய், ஆய்நலம் வவ்வுதியே?
செங்கோல் நடாவிப் பல்உயிர்க்கம் செய் வினை மெய் தெரிய,
வெங் கோத் தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே!
தணி நீர் மதியம் சூடி, நீடு தாங்கிய தாழ்சடையன்,
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய், பெய் கலை வவ்வுதியே?
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ்கடலால் அழுங்க,
துணி நீர் பணிய, தான் மிதந்த தோணிபுரத்தானே!
கவர் பூம்புனலும் தண்மதியும் கமழ் சடைமாட்டு, அயலே
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய்நலம் வவ்வுதியே?
அவர் பூண் அரையர்க்கு ஆதிஆய அடல் மன்னன் ஆள் மண்மேல்
தவம் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே!
முலையாழ் கெழும, மொந்தை கொட்ட, முன்கடைமாட்டு அயலே,
நிலையாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், நீ நலம் வவ்வுதியே?
தலைஆய்க் கிடந்து இவ் வையம்எல்லாம் தனது ஓர் ஆணை நடாய்,
சிலையால் மலிந்த சீர்ச் சிலம்பன் சிரபுரம் மேயவனே!
எருதே கொணர்க! என்று ஏறி, அங்கை இடு தலையே கலனா,
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய், கண் துயில் வவ்வுதியே?
ஒரு தேர் கடாவி ஆர்அமருள் ஒருபதுதேர் தொலையப்
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே!
துவர் சேர் கலிங்கப்போர்வையாரும், தூய்மை இலாச் சமணும்,
கவர்செய்து உழவக் கண்ட வண்ணம், காரிகை வார்குழலார்
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய்நலம் வவ்வுதியே?
தவம்செய் நெடுவேல் சண்டன் ஆளச் சண்பை அமர்ந்தவனே!
நிழலால் மலிந் கொன்றை சூடி, நீறு மெய் பூசி, நல்ல
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய், கோல்வளை வவ்வுதியே?
அழல்ஆய் உலகம் கவ்வை தீர, ஐந்தலை நீள் முடிய
கழல் நாக(அ)ரையன் காவல் ஆகக் காழி அமர்ந்தனே!
கட்டு ஆர் துழாயன், தாமரையான், என்று இவர் காண்பு அரிய
சிட்டார் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், செய் கலை வவ்வதியே?
நட்டார் நடுவே நந்தன் ஆள, நல்வினையால் உயர்ந்த
கொட்டாறு உடுத்த தண்வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே!
கடை ஆர் கொடி நல் மாட வீதிக் கழுமலஊர்க் கவுணி
நடை ஆர் பனுவல்மாலைஆக ஞானசம்பந்தன் நல்ல
படை ஆர் மழுவன்மேல் மொழிந்த பல்பெயர்ப்பத்தும் வல்லார்க்கு
அடையா, வினைகள் உலகில் நாளும்; அமருலகு ஆள்பவரே.
அரனை உள்குவீர்! பிரமன்ஊருள் எம் பரனையே மனம் பரவி, உய்ம்மினே!
காண உள்குவீர்! வேணுநல்புரத்தாணுவின் கழல் பேணி, உய்ம்மினே!
நாதன் என்பிர்காள்! காதல் ஒண் புகல் ஆதிபாதமே ஓதி, உய்ம்மினே!
அங்கம் மாது சேர் பங்கம்ஆயவன், வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே.
வாள்நிலாச் சடைத் தோணிவண்புரத்து ஆணிநன்பொனைக் காணுமின்களே!
பாந்தள் ஆர் சடைப் பூந்தராய் மன்னும், ஏந்து கொங்கையாள் வேந்தன் என்பரே.
கரிய கண்டனை, சிரபுரத்துள் எம் அரசை, நாள்தொறும் பரவி, உய்ம்மினே!
நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி இறைவன் நாமமே மறவல், நெஞ்சமே!
தென்றில் அரக்கனைக் குன்றில் சண்பை மன் அன்று நெரித்தவா, நின்று நினைமினே!
அயனும் மாலும்ஆய் முயலும் காழியான் பெயல்வை எய்தி நின்று இயலும், உள்ளமே.
தேரர் அமணரைச் சேர்வு இல் கொச்சை மன் நேர் இல் கழல் நினைந்து ஓரும், உள்ளமே.
தொழு மனத்தவர், கழுமலத்து உறைபழுது இல் சம்பந்தன் மொழிகள்பத்துமே