சடையாய் எனுமால்; சரண் நீ எனுமால்;
விடையாய் எனுமால்; வெருவா விழுமால்;
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ, இவன் உள் மெலிவே.
சிந்தாய் எனுமால்; சிவனே எனுமால்;
முந்தாய் எனுமால்; முதல்வா எனுமால்;
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே.
அறையார் கழலும் அழல்வாய் அரவும்
பிறையார் சடையும் உடையாய்; பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை
இறையார் வளை கொண்டு எழில் வல்வினையே
ஒலி நீர் சடையில் கரந்தாய், உலகம்
பலி நீர் திரிவாய், பழி இல் புகழாய்
மலி நீர் மருகல் மகிழ்வாய், இவளை
மெலி நீர் மையள் ஆக்கவும் வேண்டினையே
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம் உடையாய் மருகல்
கணி நீலவண்டார் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே.
பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையார் மருகல்
புலரும் தனையும் துயிலாள் புடைபோந்து
அலரும் படுமோ அடியாள் இவளே.
வழுவாள் பெருமான் கழல்வாழ்க எனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாள் உடையாய் மருகல் பெருமான்
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே.
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகல் பெருமான்
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே.
எரிஆர் சடையும் மடியும் இருவர்
தெரியாதது ஓர் தீத்திரள் ஆயவனே
மரியார் பிரியா மருகல் பெருமான்
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே.
அறிவுஇல் சமணும் அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறிஏந்து கையாய்; மருகல் பெருமான்
நெறியார் குழலி நிறை நீக்கினையே.
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர்ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல்ஞான சம்பந்தன் பாடல் வல்லார்
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே.