சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்துக்
குற்றம்இல் குணங்களொடு கூடும் அடியார்கள்
மற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே.
வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள் மேலே
கொண்டு அணைசெய் கோலம்அது கோள்அரவினோடும்
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஓர் அம்பால்
கண்டவன் இருப்பது கருப்பறிய லூரே.
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல்ஆக
போதினோடு போதுமலர் கொண்டு புனைகின்ற
நாதன்என நள்இருள்முன் ஆடுகுழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறிய லூரே.
மடம்படு மலைக்கு இறைவன் மங்கைஒரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்து அணவு காலன் உயிர் காலஒரு காலால்
கடந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.
ஒருத்தி உமை யோடும் ஒருபாகம் அதுவாய
நிருத்தன் அவன் நீதிஅவன் நித்தன் நெறிஆய
விருத்தன் அவன் வேதம்என அங்கம் அவை ஓதம்
கருத்தவன் இருப்பது கருப்பறிய லூரே.
விண்ணவர்கள், வெற்பு அரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான்
எண்ணி வரும் காமன்உடல் வேவ எரிகாலும்
கண்ணவன் இருப்பது கருப்பறிய லூரே.
ஆதிஅடியைப் பணிய அப்போடு மலர்ச்சேர்
சோதிஒளி நல்புகை வளர்க்கு வடுபுக்குத்
தீதுசெய வந்துஅணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறிய லூரே.
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர்செயும் தொழில் இலங்கை நகர்வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்றுவிழ மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.
பரந்து அது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்துஓர் சடைமேல்மிசை உகந்து அவளை வைத்து
நிரந்தர நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.
அற்றம் மறையா அமணர் ஆதம் இலி புத்தர்
சொற்றம் அறியாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்
கற்று என இருப்பது கருப்பறிய லூரே.
நலம்தரு புனல்கலி ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்களைப்
பலம்தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று
வலம் தரும் அவர்க்கு வினைவாடல் எளிது ஆமே.