மட்டுஇட்ட புன்னைஅம் கானல் மடமயிலைக்
கட்டுஇட்டம் கொண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டுஇட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்.
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்துஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றம்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
மைப்பூசம் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூச நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்.
மடல்ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடல் ஆட்டுக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
அடல் ஆன்ஏறு ஊரும் அடிகள் அடிபரவி
நடம் ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய்.
மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.
தண்ணா அரக்கன்தோள் சாய்த்துஉகந்த தாளினான்
கண்ஆர் மயிலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
பண்ஆர் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ஆரக் காணாதே போதியோ பூம்பாவாய்.
நல்தா மரைமலர்மேல் நான்முகனும் நாரணனும்
முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்கள் ஏத்தும் கபாலீச் சரம்அமர்ந்தான்
பொன்தாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும்
இரும்சாக் கியர்கள் எடுத்துஉரைப்ப நாட்டில்
கரும்சோலை சூழ்ந்த கபாலீச் சரம்அமர்ந்தான்
பெரும்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.
கான்அமர் சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
தேன்அமர் பூம்பாவைப் பாட்டுஆகச் செந்தமிழான்
ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும் வல்லார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.