வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல விணை தடவி,
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி சனி, பாம்பு இரண்டும் உடனே
ஆசுஅறும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி, ஏழை உடனே,
பொன்பொதி, மத்த மாலை புனல்சூடி வந்து, என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு, ஆறும், உடனாய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்லநல்ல; அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளிநீறு அணிந்து உமையோடும், வெள்ளை விடைமேல்,
முருகு அலர்கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்,
திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி, திசை தெய்வம் ஆன பலவும்,
அருநெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.
மதி நுதல் மங்கையோடு, வடஆல் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர் கொடு நோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.
நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள்தனோடும் விடை ஏறும், நங்கள் பரமன்,
துஞ்சு இருள், வன்னி, கொன்றை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும் மிகையான பூதம் அவையும்,
அஞ்சிடும், நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.
வாள்வரி அதள்அது ஆடைவரி கோவணத்தர் மடவாள்தனோடும் உடன்ஆய்,
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து, என் உளமே புகுந்த அதனால்,
கோள்அரி, உழுவையோடு, கொலையானை கேழல், கொடு நாகமோடு, கரடி,
ஆள்அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.
செப்பு இளமுலை நல்மங்கை ஒருபாகமாக விடைஏறு செல்வன் அடைவார்
ஒப்புஇள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும் வாதம், மிகையான பித்தும், வினையான வந்து நலியா,
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.
வேள்பட விழிசெய்து அன்று, விடைமேல் இருந்து மடவாள்தனோடும் உடனாய்,
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து, என் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்தனோடும் இடர்ஆன வந்து நலியா;
ஆழ்கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.
பலபல வேடம் ஆகும்பரன், நாரிபாகன், பசு ஏறும் எங்கள் பரமன்,
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்,
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலம் ஆன பலவும்
அலைகடல், மேரு நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்,
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.
தேன் அமர் பொழில்கொள் ஆலைவிளை செந்நெல் துன்னி, வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்,
தான்உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர், ஆணை நமதே.