வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே? பாதி மாதுடன் ஆய பரமனே.
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
வைதிகத்தின் வழி ஒழுகாத அக்கைதவம் உடைக் கார் அமண் தேரரை
எய்தி, வாது செயத் திருவுள்ளமே? கைதிகழ் தரு மாமணி கண்டனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
மறை வழக்கம் இலாத மாபாவிகள் பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை
முறிய வாது செயத் திருவுள்ளமே? மறி உலாம் கையில் மா மழுவாளனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
அறுத்த அங்கம் ஆற ஆயின நீர்மையைக் கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து, வாது செயத் திருவுள்ளமே? முறித்த வாண் மதிக் கண்ணி முதல்வனே.
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த, வாது செயத் திருவுள்ளமே? வெந்தநீறு அது அணியும் விகிர்தனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை
ஓட்டி வாது செயத் திருவுள்ளமே? காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே.
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம் விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
கழல, வாது செயத் திருவுள்ளமே? தழல் இலங்கு திருவுருச் சைவனே.
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி, வாது செயத் திருவுள்ளமே? ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்,
ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
நீலமேனி அமணர் திறத்து நின் சீலம் வாது செயத் திருவுள்ளமே?
மாலும் நான்முகனும் காண்பு அரியதோர் கோலம் மேனியது ஆகிய குன்றமே,
ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
அன்று முப்புரம் செற்ற அழக நின் துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாது செயத் திருவுள்ளமே? கன்று சாக்கியர் காணாத் தலைவனே,
ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு வாடல் மேனி அமணரை வாட்டிட,
மாடக் காழிச் சம்பந்தன், மதித்த இப்பாடல் வல்லவர், பாக்கிய வாளரே.