காதல் ஆகிக் கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவர்தமை நன்னெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம், நமச்சி வாயவே.
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்,
வம்பு நாள்மலர் வார்மது ஒப்பது;
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.
நெக்குள் ஆர்வம் மிகப்பெருகி, நினைந்து
அக்கு மாலை கொடு அம்கையில் எண்ணுவார்,
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.
இயமன் தூதரும் அஞ்சுவர்; இன்சொலால்
நயம் வந்து, ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமம்தான் நினைவார்க்கு இனியான், நெற்றி
நயனன், நாமம் நமச்சி வாயவே.
கொல்வாரேனும், குணம் பல நன்மைகள்
இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின்,
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்;
நல்லார் நாமம் நமச்சி வாயவே.
மந்தரம் ஆன பாவங்கள் மேவிய
பந்தனை அவர் தாமும் பகர்வரேல்,
சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால்,
நந்தி நாமம் நமச்சி வாயவே.
நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்,
உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்,
வரதன் நாமம் நமச்சி வாயவே.
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலம்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி, வாய்மொழி செய்தவன் உய்வகை
நலம்கொள் நாமம் நமச்சி வாயவே.
போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன்
பாதம் தான் முடி நேடிய பண்பராய்;
யாதும் காண்பரிது ஆகி, அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.
கஞ்சி மண்டையர், கையில்உண் கையர்கள்,
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்,
விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுதுசெய்
நஞ்சு உண் கண்டன் நமச்சி வாயவே.
நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால், தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே.