வாழ்க அந்தணர், வானவர் ஆன்இனம்;
வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக;
ஆழ்க தீயது எல்லாம் அரண் நாமமே
சூழ்க; வையகமும் துயர் தீர்கவே.
அரிய காட்சியராய்த் தமது அங்கை சேர்
எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்
கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும்
பெரியர்; ஆர் அறிவார் அவர் பெற்றியே?
வெந்த சாம்பல் விரை எனப் பூசியே,
தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பர்; ஆல்
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ?
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும், ஆதிமாண்பும்
கேட்பான் புகில், அளவுஇல்லை; கிளக்க வேண்டா;
கோட்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை
தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்கதக்கார்.
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர் விட்டுளன், எங்கள் சோதி;
மாதுக்கம் நீங்கல் உறுவீர்; மனம் பற்றி வாழ்மின்;
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே.
ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும், புகழ் அல்லது பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் அறுக்கும் எனக் கேட்டீர் ஆகில்
நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது நாட்டல் ஆமே?
கடிசேர்ந்த போது மலர் ஆன கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால் கொண்டு, அங்கஆட்டிட தாதைபண்டு
முடி சேர்ந்தகாலை அறவெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம், அறிவார் சொலக்கேட்டும் அன்றே.
வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப்படாமை உலகத்தவர் ஏத்தல் செய்யப்
பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே.
பார் ஆழி வட்டம் பகையால் நலிந்து ஆட்ட, ஆடிப்
பேர் ஆழி ஆனது இடர்கண்டு, அருள்செய்தால் பேணி
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சஇடம் கொண்டவர்க்குப்
போர் ஆழி ஈந்த புகழும், புகழ் உற்றது அன்றே.
மால் ஆயவனும் மறைவல்ல நான்முகனும்
பால்ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த
ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள்செய்ததாமே.
அற்று அன்றி அம்தண் மதுரைத் தொகை ஆக்கினானும்
தெற்று என்று தெய்வம் தெளியார், கரைக்குஓலை தெண்நீர்ப்
பற்று இன்றிப் பாங்கு எதிர்பின் ஊரவும் பண்புநோக்கில்
பெற்றொன்று உயர்த்தபெருமான் பெருமானும் அன்றே.
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்,
பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும்
வல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே.