கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்;
கொடுமை பலசெய்தன நான் அறியேன்;
ஏற்றாய், அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்;
நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்;
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்;
அஞ்சேலும் என்னீர்: அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்;
படுவெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்;
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்
சுடுகின்றது சூலை; தவிர்த்து அருளீர்;
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர்;
பெற்றம் ஏற்று உகந்தீர்; சுற்றும் வெண்தலை கொண்டு
அணிந்தீர்; அடிகேள், அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.
முன்னம் அடியேன் அறியாமையினான் முனிந்து
என்னை நலிந்து முடக்கியிடப்
பின்னை, அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்;
சுடுகின்றது சூலை; தவிர்த்து அருளீர்;
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ
தலை ஆயவர் தம்கடன் ஆவதுதான்?
அன்னம் நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.
கரத்து ஆள்வர் காவல் இகழ்ந்தமையால்
கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்து ஆய கயம் புக நூக்கியிட, நிலைக்கொள்ளும்
வழித்துறை ஒன்று அறியேன்;
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்,
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார், புனல் ஆர் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.
சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன்;
தமிழோடு இசைபாடல் மறந்து அறியேன்;
நலம்தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்;
உன்நாமம் என்நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலிகொண்டு உழல்வாய்;
உடலுள் உறுசூலை தவிர்த்து அருளாய்;
அலந்தேன் அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.
உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண்பொருளும்
ஒருவர்தலை காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல்உற்றால்,
வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்;
பயந்தே என்வயிற்றின் அகம்படியே
பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன், அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.
வலித்தேன் மனைவாழ்க்கை, மகிழ்ந்து, அடியேன்,
வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை;
சங்கவெண் குழைக் காதுஉடை எம்பெருமான்
கலித்தே என் வயிற்றின் அகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன
அலுத்தேன் அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.
பொன்போல மிளிர்வது ஓர் மேனியினிர்;
புரிபுன் சடையீர்; மெலியும் பிறையீர்;
துன்பே, கவலை, பிணி என்று இவற்றை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்;
என்போலிகள் உம்மை இனித் தெளியார்,
அடியார் படுவது இதுவே ஆகில்,
அன்பே அமையும், அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.
போர்த்தாய், அங்கு ஓர் ஆனையின் ஈர் உரி தோல்,
புறங்காடு அரங்கா, நடம் ஆட வல்லாய்;
ஆர்த்தான் அரக்கன்தனை மால்வரைக் கீழ்
அடர்த்திட்டு, அருள் செய்தஅது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்
என்வேதனை ஆன விலக்கியிடாய்;
ஆர்த்துஆர் புனல்சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.