சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப்பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்டமில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றுமில்லையாம்
பண்ணிய உலகினில்பயின்ற பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே
இடுக்கண் பட்டிருக்கினும் இரந்துயாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோமல்லோம்
அடுக்கற் கீழ்க் கிடக்கினு மருளின் நாம்உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே
வெந்த நீறருங்கலம் விரதிகட் கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சிவாயவே
சலமிலன் சங்கரம் சார்ந்தவர்க்கலால்
நலமிலன் நாடொறும் நல்குவான் நலம்
குலமில ராகிலும்குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றாலும்
ஓடினேன் ஓடிச் சென்றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே
இல்லக விளக்கது இருள்கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே
முன்னெறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங் கடைந்தவர்க் கெல்லாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாய பத்து
ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண இல்லையே.