எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.
நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்து உன்னைப்
பேயாய்த் திரிந்(து) எய்த்தேன் பெறல் ஆகாஅருள் பெற்றேன்
வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
ஆயா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே
மன்னே! மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னைப்
பொன்னே! மணிதானே வயிரம்மே பொருது உந்தி
மின்னார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
அன்னே உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.
முடியேன் இனிப்பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ!
கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கோள் நீ!
செடியார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
அடிகேள் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய்
ஆதன் பொருள் ஆனேன் அறிவில்லேன் அருளாளா!
தாதார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
ஆதி உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே.
தண்ணார் மதிசூடி! தழல் போலும் திருமேனீ!
எண்ணார்புரம் மூன்றும் எரி உண்ண நகை செய்தாய்
மண்ணார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
அண்ணா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.
ஊனாய் உயிர் ஆனாய் உடல் ஆளாய் உலகு ஆனாய்
வானாய் நிலன் ஆனாய் கடல் ஆனாய் மலை ஆனாய்
தேனார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
ஆனாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.
ஏற்றார்புரம் மூன்றுமெரி யுண்ணச்சிலை தொட்டாய்
தேற்றதன சொல்லித்திரி வேனோ செக்கர்வானீர்
ஏற்றாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
ஆற்றாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.
மழு வாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கை பங்கா!
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே
செழுவார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
அழகா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே
காரூர் புனல் எய்திக் கரை கல்லித் திரைக்கையால்
பாரூர் புகழ் எய்தித் திகழ் பன்மாமணி உந்திச்
சீருர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
ஆரூரன் எம் பெருமாற்கு ஆள் அல்லேன் எனலாமே.