மீளா அடிமை உமக்கே ஆளாய்ப், பிறரை வேண்டாதே
மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர்? திருவாரூரீர் வாழ்ந்து போதீரே.
விற்றுக்கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு அடிகேள், என்கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால், வாழ்ந்து போதீரே.
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே,
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவைபோல,
என்றும் முட்டாப் பாடும் அடியார் தம்கண் காணாது,
குன்றில் முட்டிக் குழியல் விழுந்தால், வாழ்ந்து போதீரே.
துருத்தி உறைவீர்; பழனம் பதியாச் சோற்றுத்துறை ஆள்வீர்,
இருக்கை திருஆரூரே உடையீர்; மனமேஎன வேண்டா;
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்து போதீரே.
செந்தண் பவளம் திகழும் சோலை இதுவோ திருஆரூர்?
எந்தம் அடிகேள், இதுவே ஆமாறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது
வந்து, எம்பெருமான் முறையோ? என்றால், வாழ்ந்து போதீரே.
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திரு ஆரூர்ப்
புனைத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையீரே,
தனத்தால் இன்றித் தாம்தாம் மெலிந்து, தம்கண் காணாது,
மனத்தால் வாடி, அடியார் இருந்தால், வாழ்ந்த போதீரே.
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே,
ஏய எம்பெருமான், இதுவே ஆமாறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
மாயம் காட்டிப் பிறவி காட்டி, மறவா மனம்காட்டிக்
காய் காட்டிக் கண்ணீர் கொண்டால் வாழ்ந்து போதீரே.
கழியாய், கடலாய், கலனாய், நிலனாய், கலந்து சொல்ஆகி,
இழியாக் குலத்தில் பிறந்தோம்; உம்மை இகழாது ஏத்துவோம்
பழிதான் ஆவது அறியீர், அடிகேள் பாடும் பத்தரோம்;
வழிதான் காணாது, அலமந்து இருந்தால் வாழ்ந்து போதீரே.
பேயோடேனும் பிறவிஒன்று இன்னாது என்பர் பிறர் எல்லாம்;
காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ, கருதிக் கொண்டக்கால்?
நாய்தான் போல நடுவே திரிந்தும், உமக்கு ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர்; திருஆரூரீர், வாழ்ந்து போதீரே.
செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ, திருஆரூர்?
பொருந்தித் திருமூ லட்டா னம்மே இடமாகக் கொண்டீரே;
இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை இகழாது ஏத்துவோம்;
வருந்தி வந்தும், உமக்கு ஒன்று உரைத்தால், வாழ்ந்து போதீரே.
காரூர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பலஆகி,
ஆரூர்த் திருமூ லட்டா னத்தே அடிப்பேர் ஆரூரன்;
பாரூர் அறிய, என்கண் கொண்டீர், நீரே பழிப்பட்டீர்,
வாரூர் முலையாள் பாகம் கொண்டீர், வாழ்ந்து போதீரே.