பெரியாழ்வார் திருமொழி –
*********************
சென்னி ஓங்கு தண் திருவேங்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே?
பறவை ஏறு பரமபுருடா நீ என்னைக் கைக்கொண்டபின்
பிறவி என்னும் கடலும் வற்றிப்பெரும்பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக் காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுத-ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே
எம்மனா என் குலதெய்வமே என்னுடைய நாயகனே
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்உலகினில் ஆர் பெறுவார்?
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம்
சும்மெனாதே கைவிட்டு ஓடித்தூறுகள் பாய்ந்தனவே
கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தாற்போல்
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோல்-ஆடி குறுகப் பெறா
தட வரைத் தோள் சக்கரபாணீ சார்ங்க விற் சேவகனே
பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தாற் போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என் அப்பா என் இருடீகேசா என் உயிர்க் காவலனே
உன்னுடைய விக்கிரமம் ஒன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம்பால் சுவர்வழி எழுதிக்கொண்டேன்
மன் அடங்க மழு வலங்கைக் கொண்ட இராம நம்பீ
என்னிடை வந்து எம்பெருமான் இனி எங்குப் போகின்றதே?
பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய் என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை உனக்கு உரித்து ஆக்கினையே
அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழச் செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக்கண்கள் அசும்பு ஒழுக
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே
பனிக் கடலில் பள்ளி- கோளைப்பழகவிட்டு ஓடிவந்து என்
மனக் கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ
தனிக் கடலே தனிச் சுடரே
தனி உலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை
உனக்கு உரித்து ஆக்கினையே தட வரைவாய் மிளிர்ந்து மின்னும்
தவள நெடுங்கொடி போல் சுடர்- ஒளியாய் நெஞ்சின் உள்ளே
தோன்றும் என் சோதி நம்பீ வட தடமும் வைகுந்தமும்
மதிற் துவராபதியும் இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால்
இடவகை கொண்டனையே வேயர் தங்கள் குலத்து உதித்த
விட்டுசித்தன் மனத்தே கோயில்கொண்ட கோவலனைக்
கொழுங்குளிர் முகில்வண்ணனை ஆயர்-ஏற்றை அமரர் கோவை
அந்தணர்தம் அமுதத்தினைச் சாயை போலப் பாட வல்லார்
தாமும் அணுக்கர்களே