பெரியாழ்வார் திருமொழி –
*********************
மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான் ஊர்
தோதவத்தித் தூய் மறையோர் துறைபடியத் துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும்புனல் அரங்கம் என்பதுவே
பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த உறைப்பன் ஊர்
மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார்
சிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே
மருமகன் தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தான் ஊர்
திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை
பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே
கூன் தொழுத்தை சிதகு உரைப்பக்கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு
ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய
கான் தொடுத்த நெறி போகிக்கண்டகரைக் களைந்தான் ஊர்
தேன்தொடுத்த மலர்ச் சோலைத்திருவரங்கம் என்பதுவே
பெருவரங்கள் அவைபற்றிப்பிழக்கு உடைய இராவணனை
உரு அரங்கப் பொருது அழித்து இவ்உலகினைக் கண்பெறுத்தான் ஊர்
குரவு அரும்பக் கோங்கு அலரக்குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடமே
கீழ் உலகில் அசுரர்களைக்கிழங்கிருந்து கிளராமே
ஆழி விடுத்து அவருடைய கரு அழித்த அழிப்பன் ஊர்
தாழை- மடல் ஊடு உரிஞ்சித்தவள வண்ணப் பொடி அணிந்து
யாழின் இசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே
கொழுப்பு உடைய செழுங்குருதி கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்
பிழக்கு உடைய அசுரர்களைப்பிணம் படுத்த பெருமான் ஊர்
தழுப்பு அரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்பு உடைய காவிரி வந்து அடிதொழும் சீர் அரங்கமே
வல் எயிற்றுக் கேழலுமாய் வாள்எயிற்றுச் சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தான் ஊர்
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண்சங்கு ஊதும் மதில் அரங்கம் என்பதுவே
குன்று ஆடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரைகடல் போல்
நின்று ஆடு கணமயில் போல் நிறம் உடைய நெடுமால் ஊர்
குன்று ஊடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி
மன்று ஊடு தென்றல் உலாம் மதில் அரங்கம் என்பதுவே
பரு வரங்கள் அவைபற்றிப் படை ஆலித்து ழுந்தானைச்
செரு அரங்கப் பொருது அழித்த திருவாளன் திருப்பதிமேல்
திருவரங்கத் தமிழ்-மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு
இருவர் அங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே