நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்;
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான்!குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்!
ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே!
வண்டுஅமரும்குழலாள் உமைநங்கை ஓர்பங்கு உடையாய்!
விண்டடவர்தம் புரம்மூன்று எரிசெய்த எம் வேதியனே!
தெண்திரை நீர் வயல் சூழ் திருக் கோளிலி எம்பெருமான்!
அண்டம்அதுஆயவனே, அவை அட்டித்தரப் பணியே!
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்;
மாதர்நல்லார் வருத்தம்(ம்)அது நீயும் அறிதி அன்றே!
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;
ஆதியே, அற்புதனே, அவை அட்டிதரப் பணியே!
சொல்லுவது என், உனை நான்? தொண்டைவாய் உமைநங்கையை நீ
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ?
கொல்லை வளம் புறவில் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே!
முல்லைமுறுவல் உமை ஒருபங்கு உடை முக்கணனே!
பல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா!
கொல்லை வளம் புறவில்-திருக் கோளிலி எம்பெருமான்!
அல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே!
குரவு அமரும் குழலாள் உமைநங்கை ஒர்பங்கு உடையாய்!
பரவை பசிவருத்தம்(ம்)அது நீயும் அறிதி அன்றே!
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;
அரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே!
எம்பெருமான்! நுனையே நினைத்து ஏத்துவன், எப்பொழுதும்;
வம்பு அமரும் குழலாள் ஒருபாகம் அமர்ந்தவனே!
செம்பொனின் மாளிகை சூழ் திருக் கோளிலி எம்பெருமான்!
அன்புஅது(வ்)ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே!
அரக்கன் முடிகரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்!
பரக்கும் அரவுஅல்குலாள் பரவைஅவள் வாடுகின்றாள்;
குரக்குஇனங்கள் குதிகொள் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;
இரக்கம்அதுஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே!
பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும்
கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிதுஆய பிரான்!
தெண்திரைநீர் வயல் சூழ் திருக் கோளிலி என்பெருமான்!
அண்டம்அதுஆயவனே, அவை அட்டித்தரப் பணியே!
கொல்லை வளம் புறவில்-திருக் கோளிலி மேயவனை
நல்லவர்தாம் பரவும் திரு நாவலஊரன்அவன்
நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏந்திய பத்தும் வல்லார்,
அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான்உலகு ஆள்பவரே.