வீடுஅலால் அவாய்இலாஅய், விழுமியார்கள் நின்கழல்
பாடல் ஆலவாய்இலாய்! பரவ நின்ற பண்பனே!
காடுஅலால் அவாய்இலாய்! கபாலி! நீள்கடி(ம்)மதில்
கூடல்ஆலவாயிலாய்!—குலாயது என்ன கொள்கையே?
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா
ஒட்டு இசைந்தது அன்றியும், உச்சியாள் ஒருத்தியா,
கொட்டு இசைந்த ஆடலாய்! கூடல்ஆலவாயிலாய்!
எட்டு இசைந்த மூர்த்தியாய்!—இருந்தஆறுஇது என்னையே?
குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல்ஆலவாயிலாய்!
சுற்றம் நீ! பிரானும் நீ! தொடர்ந்து இலங்கு சோதி நீ!
கற்ற நூல் கருத்தும் நீ! அருத்தம், இன்பம், என்று இவை
முற்றும் நீ! புகழ்ந்து முன் உரைப்பது என், முக(ம்)மனே?
முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வ! நீ முழங்கு அழல்
அதிர வீசி ஆடுவாய்! அழகன் நீ! புயங்கன் நீ!
மதுரன் நீ! மணாளன் நீ! மதுரைஆலவாயிலாய்!
சதுரன் நீ! சதுர்முகன்கபாலம் ஏந்து சம்புவே!
கோலம் ஆய நீள்மதிள் கூடல்ஆலவாயிலாய்!
பாலன் ஆய தொண்டு செய்து, பண்டும் இன்றும் உன்னையே,
நீலம் ஆய கண்டனே! நின்னை அன்றி, நித்தலும்,
சீலம் ஆய சிந்தையில்-தேர்வது இல்லை, தேவரே.
பொன்தயங்கு-இலங்கு ஒளி(ந்)நலம் குளிர்ந்த புன்சடை
பின் தயங்க ஆடுவாய்! பிஞ்ஞகா! பிறப்புஇலீ!
கொன்றை அம் முடியினாய்! கூடல்ஆலவாயிலாய்!—
நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே.
ஆதி அந்தம் ஆயினாய்! ஆலவாயில் அண்ணலே!
சோதி அந்தம் ஆயினாய்! சோதியுள் ஒர் சோதியாய்!—
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால்,
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே?
கறை இலங்கு கண்டனே! கருத்து இலாக் கருங்கடல்-
துறை இலங்கை மன்னனைத் தோள் அடர ஊன்றினாய்!
மறை இலங்கு பாடலாய்! மதுரைஆலவாயிலாய்!—
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.
தா வண(வ்) விடையினாய்! தலைமை ஆக, நாள்தொறும்
கோவண(வ்)உடையினாய்! கூடல்ஆலவாயிலாய்!—
தீ வணம் மலர்மிசைத் திசைமுகனும், மாலும், நின்
தூ வணம்(ம்) அளக்கிலார், துளக்கம் எய்துவார்களே.
தேற்றம் இல் வினைத்தொழில்-தேரரும் சமணரும்
போற்றுஇசைத்து, நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளார்;
கூற்று உதைத்த தாளினாய்! கூடல்ஆலவாயிலாய்!
நால்-திசைக்கும் மூர்த்திஆகி நின்றது என்ன நன்மையே?
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான்—
பாய கேள்வி ஞானசம்பந்தன்—நல்ல பண்பினால்,
ஆய சொல்லின்மாலைகொண்டு, ஆலவாயில் அண்ணலைத்
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர், தேவரே.