ஒன்றுகொல்ஆம் அவர் சிந்தை உயர் வரை;
ஒன்றுகொல்ஆம் உயரும் மதி சூடுவர்;
ஒன்றுகொல்ஆம் இடு வெண்தலை கையது;
ஒன்றுகொல்ஆம் அவர் உர்வதுதானே.
இரண்டுகொல்ஆம் இமையோர் தொழு பாதம்;
இரண்டுகொல்ஆம் இலங்கும் குழை; பெண், ஆண்,
இரண்டுகொல்ஆம் உருவம்; சிறு மான், மழு,
இரண்டுகொல்ஆம் அவர் ஏந்தினதாமே.
மூன்றுகொல்ஆம் அவர் கண்நுதல் ஆவன;
மூன்றுகொல்ஆம் அவர் சூலத்தின் மொய் இலை;
மூன்றுகொல்ஆம் கணை, கையது வில், நாண்;
மூன்றுகொல்ஆம் புரம் எய்தனதாமே.
நாலுகொல்ஆம் அவர்தம் முகம்ஆவன;
நாலுகொல்ஆம் சனனம் முதல்-தோற்றமும்;
நாலுகொல்ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள்;
நாலுகொல்ஆம் மறை பாடினதாமே.
அஞ்சுகொல்ஆம் அவர் ஆடுஅரவின் படம்;
அஞ்சுகொல்ஆம் அவர் வெல் புலன்ஆவன;
அஞ்சுகொல்ஆம் அவர் காயப்பட்டான் கணை;
அஞ்சுகொல்ஆம் அவர் ஆடினதாமே.
ஆறுகொல்ஆம் அவர் அங்கம் படைத்தன;
ஆறுகொல்ஆம் அவர்தம் மகனார் முகம்;
ஆறுகொல்ஆம் அவர் தார்மிசை வண்டின் கால்;
ஆறுகொல்ஆம் சுவை ஆக்கினதாமே.
ஏழுகொல்ஆம் அவர் ஊழி படைத்தன;
ஏழுகொல்ஆம் அவர் கண்ட இருங்கடல்;
ஏழுகொல்ஆம் அவர் ஆளும் உலகங்கள்;
ஏழுகொல்ஆம் இசை ஆக்கினதாமே.
எட்டுக்கொல்ஆம் அவர் ஈறு இல் பெருங் குணம்;
எட்டுக்கொல்ஆம் அவர் சூடும் இனமலர்;
எட்டுக்கொல்ஆம் அவர் தோள்இணைஆவன;
எட்டுக்கொல்ஆம் திசை ஆக்கினதாமே.
ஒன்பதுபோல் அவர் வாசல் வகுத்தன;
ஒன்பதுபோல் அவர் மார்பினில் நூல்-இழை;
ஒன்பதுபோல் அவர் கோலக் குழல்சடை;
ஒன்பதுபோல் அவர் பார்இடம்தானே.
பத்துக்கொல்ஆம் அவர் பாம்பின் கண், பாம்பின் பல்;
பத்துக்கொல்ஆம் எயிறு(ந்) நெரிந்து உக்கன;
பத்துக்கொல்ஆம் அவர் காயப்பட்டான் தலை;
பத்துக்கொல்ஆம் அடியார் செய்கைதானே.