குண்டைக் குறள்பூதம் குழும, அனல் ஏந்தி,
கெண்டை பிறழ் தெண்நீர்க் கெடில வடபக்கம்,
வண்டு மருள் பாட, வளர் பொன்விரி கொன்றை
விண்ட தொடையலான் ஆடும், வீரட்டானத்தே.
அரும்பும் குரும்பையும் அலைத்த மென்கொங்கைக்
கரும்புஇன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி,
சுரும்பு உண் விரிகொன்றைச் சுடர்பொன்சடை தாழ,
விரும்பும் அதிகையுள் ஆடும், வீரட்டானத்தே.
ஆடல் அழல்நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட,
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான்,
மாட முகட்டின்மேல் மதி தோய் அதிகையுள்,
வேடம்பல வல்லான் ஆடும், வீரட்டானத்தே.
எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனல்ஏந்தி
மண் ஆர் முழவு அதிர, முதிரா மதி சூடி,
பண் ஆர் மறை பாட,—பரமன்—அதிகையுள்,
விண்ணோர் பரவ, நின்று ஆடும், வீரட்டானத்தே.
கரிபுன்புறம் ஆய கழிந்தார் இடுகாட்டில்,
திரு நின்று ஒரு கையால்,-திரு ஆம் அதிகையுள்,
எரி எந்திய பெருமான், எரிபுன்சடை தாழ,
விரியும் புனல் சூடி, ஆடும், வீரட்டானத்தே.
துளங்கும் சுடர் அங்கைத் துதைய விளையாடி,
இளங்கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி,
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள்,
விளங்கும் பிறைசூடி ஆடும், வீரட்டானத்தே.
பாதம் பலர் ஏத்த,—பரமன், பரமேட்டி—
பூதம் புடை சூழ, புலித்தோல் உடைஆக,
கீதம் உமை பாட, கெடில வடபக்கம்,
வேதமுதல்வன் நின்று ஆடும், வீரட்டானத்தே.
கல் ஆர் வரை அரக்கன் தடந்தோள் கவின் வாட,
ஒல்லை அடர்த்து, அவனுக்கு அருள்செய்து, அதிகையுள்,
பல் ஆர் பகுவாய நகுவெண்தலை சூடி,
வில்லால் எயில் எய்தான் ஆடும், வீரட்டானத்தே.
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்
பொடிஆடு மார்பானை, புரிநூல் உடையானை,
கடி ஆர் கழுநீலம் மலரும் அதிகையுள்,
வெடி ஆர் தலை ஏந்தி, ஆடும், வீரட்டானத்தே.
அரையோடு அலர் பிண்டி மருவிக் குண்டிகை
சுரைஓடு உடன்ஏந்தி, உடை விட்டு உழல்வார்கள்
உரையோடு உரை ஒவ்வாது உமையோடு உடன்ஆகி,
விரை தோய் அலர்தாரான் ஆடும், வீரட்டானத்தே.
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்,
வேழம் பொரு தெண்நீர் அதிகை வீரட்டானத்துச்
சூழும் கழலானைச் சொன்ன தமிழ்மாலை,
வாழும் துணைஆக நினைவார் வினை இலரே.