கூற்று ஆயினஆறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்;—அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
நெஞ்சம் உமக்கே இடம்ஆக வைத்தேன்;
நினையாது ஒருபோதும் இருந்துஅறியேன்;
வஞ்சம்இது ஒப்பது கண்டுஅறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட,
நஞ்சுஆகி வந்து என்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்;
அஞ்சேலும்! என்னீர்—அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர்!
படுவெண்தலையில் பலி கொண்டு உழல்வீர்!
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல்உற்றால்,
சுடுகின்றதுசூலை தவிர்த்துஅருளீர்—
பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர்!
பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண்தலை கொண்டு
வீரட்டானத்து உறை அம்மானே!
முன்னம், அடியேன் அறியாமையினான்
முனிந்து, என்னை நலிந்து முடக்கியிட,
பின்னை, அடியேன் உமக்கு ஆளும்பட்டேன்;
சுடுகின்றதுசூலை தவிர்த்துஅருளீர்;
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதுஅன்றோ,
தலைஆயவர்தம் கடன்ஆவதுதான்?—
அன்னம்நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால்,
கரை நின்றவர், கண்டுகொள்! என்று சொல்லி,
நீத்துஆய கயம் புக நூக்கியிட,
நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்;
வார்த்தைஇது ஒப்பது கேட்டுஅறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்—புனல் ஆர் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
சலம், பூவொடு, தூபம், மறந்துஅறியேன்;
தமிழோடு இசைபாடல் மறந்துஅறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்துஅறியேன்;
உன் நாமம் என் நாவில் மறந்துஅறியேன்;
உலந்தார்தலையில் பலி கொண்டு உழல்வாய்!
உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!
அலந்தேன், அடியேன்;—அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
உயர்ந்தேன், மனைவாழ்க்கையும் ஒண் பொருளும்,
ஒருவர் தலை காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல்உற்றால்,
வலிக்கின்றதுசூலை தவிர்த்துஅருளீர்;
பயந்தே என் வயிற்றின் அகம்படியே
பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன், அடியேன்;—அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
வலித்தேன் மனைவாழ்க்கை, மகிழ்ந்து அடியேன்,
வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை;
சங்கவெண்குழைக் காது உடை எம்பெருமான்!
கலித்தே என் வயிற்றின் அகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன,
அலுத்தேன், அடியேன்;—அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர்!
புரிபுன்சடையீர்! மெலியும் பிறையீர்!
துன்பே, கவலை, பிணி, என்று இவற்றை
நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்!
என்போலிகள் உம்மை இனித் தெளியார்,
அடியார் படுவது இதுவேஆகில்;
அன்பே அமையும்—அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர்உரி-தோல்!
புறங்காடு அரங்கா நடம்ஆட வல்லாய்!
ஆர்த்தான் அரக்கன்தனை மால்வரைக்கீழ்
அடர்த்திட்டு, அருள்செய்தஅது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்,
என் வேதனைஆன விலக்கியிடாய்—
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!