சுண்ணவெண் சந்தனச்சாந்தும், சுடர்த் திங்கள் சூளா மணியும்,
வண்ண உரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலவப்புனலும், உடையார்ஒருவர்தமர், நாம்!—
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
பூண்டது ஒர் கேழல்எயிறும், பொன்திகழ் ஆமை புரள,
நீண்ட திண்தோள் வலம் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்நூலும்,
காண்தகு புள்ளின் சிறகும், கலந்த கட்டங்கக் கொடியும்,
ஈண்டு கெடிலப்புனலும், உடையார்ஒருவர்தமர், நாம்!—
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
ஒத்த வடத்து இள நாகம் உருத்திரபட்டம்இரண்டும்,
முத்துவடக் கண்டிகையும், முளைத்து, எழு மூஇலைவேலும்,
சித்தவடமும், அதிகைச் சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து
தத்தும் கெடிலப்புனலும், உடையார்ஒருவர்தமர், நாம்!—
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
மடமான்மறி, பொன்கலையும், மழு, பாம்பு, ஒரு கையில் வீணை,
குடமாள்வரைய திண்தோளும், குனிசிலைக்கூத்தின் பயில்வும்,
இடம் மால் தழுவிய பாகம், இரு நிலன் ஏற்ற சுவடும்,
தடம் ஆர் கெடிலப் புனலும், உடையார்ஒருவர்தமர், நாம்!—
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
பலபல காமத்தர் ஆகிப் பதைத்து எழுவார் மனத்துள்ளே
கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்,
வலம் ஏந்து இரண்டுசுடரும், வான் கயிலாயமலையும்,
நலம் ஆர் கெடிலப்புனலும், உடையார்ஒருவர்தமர், நாம்!—
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
கரந்தன கொள்ளிவிளக்கும், கறங்கு துடியின் முழக்கும்,
பரந்த பதினெண்கணமும், பயின்றுஅறியாதன பாட்டும்,
அரங்குஇடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும்,
நிரந்த கெடலப்புனலும், உடையார்ஒருவர்தமர், நாம்!—
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
கொலை வரிவேங்கை அதளும், குலவோடு இலங்கு பொன்-தோடும்,
விலை பெறு சங்கக்குழையும், விலை இல் கபாலக்கலனும்,
மலைமகள் கைக்கொண்ட மார்பும், மணி ஆர்ந்து இலங்கு மிடறும்,
உலவு கெடிலப்புனலும், உடையார்ஒருவர்தமர், நாம்!—
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
ஆடல் புரிந்த நிலையும், அரையில் அசைத்த அரவும்,
பாடல் பயின்ற பல்பூதம், பல்ஆயிரம் கொள் கருவி
நாடற்கு அரியது ஒர் கூத்தும், நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து
ஓடும் கெடிலப்புனலும், உடையார்ஒருவர்தமர், நாம்!—
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
சூழும் அரவத்துகிலும், துகில் கிழி கோவணக்கீளும்,
யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற
வேழம் உரித்த நிலையும், விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து
தாழும் கெடிலப்புனலும், உடையார்ஒருவர்தமர், நாம்!—
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
நரம்பு எழு கைகள் பிடித்து, நங்கை நடுங்க, மலையை
உரங்கள்எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும்ஒன்றும் அலற,
வரங்கள் கொடுத்து அருள்செய்வான், வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.