தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி,
தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர்,
கொல்லிக் குளிர் அறைப்பள்ளி, கேரவல்-
வீரட்டம், கோகரணம், கோடிகாவும்,
முல்லைப் புறவம் முருகன்பூண்டி,
முழையூர், பழையாறை, சத்திமுற்றம்,
கல்லில்-திகழ் சீர் ஆர் காளத்தியும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.
ஆரூர் மூலட்டானம், ஆனைக்காவும்,
ஆக்கூரில்-தான்தோன்றிமாடம், ஆவூர்,
பேரூர், பிரமபுரம், பேராவூரும்,
பெருந்துறை, காம்பீலி, பிடவூர், பேணும்
கூர் ஆர் குறுக்கைவீரட்டான(ம்)மும்,
கார் ஆர் கழுக்குன்றும், கானப்பேரும்,
கயிலாய்நாதனையே காணல் ஆமே.
இடைமருது, ஈங்கோய், இராமேச்சுரம்,
இன்னம்பர், ஏர் இடவை, ஏமப்பேறூர்,
சடைமுடி, சாலைக்குடி, தக்க(ள்)ளூர்,
தலையாலங்காடு, தலைச்சங்காடு,
கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர்,
கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு,
கடைமுடி, கானூர், கடம்பந்துறை,
கயிலாயநாதனையே காணல் ஆமே.
எச்சில்இளமர், ஏமநல்லூர்,
இலம்பையங்கோட்டூர், இறையான்சேரி,
அச்சிறுப்பாக்கம், அளப்பூர், அம்பர்,
ஆவடுதண்துறை, அழுந்தூர், ஆறை,
கச்சினம், கற்குடி, கச்சூர் ஆலக்-
கோயில், கரவீரம், காட்டுப்பள்ளி,
கச்சிப் பலதளியும், ஏகம்பத்தும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.
கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர்,
கொங்கணம், குன்றியூர், குரக்குக்காவும்,
நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்காவும்,
நின்றியூர், நீடூர், நியமநல்லூர்,
இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர்,
எறும்பியூர், ஏர் ஆரும் ஏமகூடம்,
கடம்பை இளங்கோயில்தன்னிலுள்ளும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.
மண்ணிப் படிக்கரை, வாழ்கொளிபுத்தூர்,
வக்கரை, மந்தாரம், வாரணாசி,
வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி,
விளமர், விராடபுரம், வேட்களத்தும்,
பெண்ணை அருள்-துறை, தண் பெண்ணாகடம்,
பிரம்பில், பெரும்புலியூர், பெருவேளூரும்,
கண்ணை, களர்க் காறை, கழிப்பாலையும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.
வீழிமிழலை, வெண்காடு, வேங்கூர்,
வேதிகுடி, விசயமங்கை, வியலூர்,
ஆழி அகத்தியான்பள்ளி, அண்ணா-
மலை, ஆலங்காடும், அரதைப்பெரும்-
பாழி, பழனம், பனந்தாள், பாதாளம்,
பராய்த்துறை, பைஞ்ஞீலி, பனங்காட்டூர், தண்
காழி, கடல் நாகைக்காரோணத்தும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.
உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர்,
உருத்திரகோடி, மறைக்காட்டுள்ளும்,
மஞ்சு ஆர் பொதியில்மலை, தஞ்சை, வழுவூர்-
வீரட்டம், மாதானம், கேதாரத்தும்,
வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகா,
வேதீச்சுரம், வில்வீச்சுரம், வெற்றியூரும்,
கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கையும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.
திண்டீச்சுரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி,
தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை,
கொண்டீச்சுரம், கூந்தலூர், கூழையூர், கூடல்,
குருகாவூர்வெள்ளடை, குமரி, கொங்கு(வ்),
அண்டர் தொழும் அதிகைவீரட்டானம்,
ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூரும்,
கண்டியூர்வீரட்டம், கருகாவூரும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.
நறையூரில் சித்தீச்சுரம், நள்ளாறு,
நாரையூர், நாகேச்சுரம், நல்லூர், நல்ல
துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை,
தோணிபுரம், துருத்தி, சோமீச்சுரம்,
உறையூர், கடல் ஒற்றியூர், ஊற்றத்தூர்,
ஓமாம்புலியூர், ஓர் ஏடகத்தும்,
கறையூர், கருப்பறியல், கன்றாப்பூரும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.
புலிவலம், புத்தூர், புகலூர், புன்கூர்,
புறம்பயம், பூவணம், பொய்கைநல்லூர்,
வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல்,
வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி
நிலம் மலி நெய்த்தானத்தோடு, எத்தானத்தும்
நிலவு பெருங்கோயில், பல கண்டால், தொண்டீர்!
கலி வலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற
கயிலாயநாதனையே காணல் ஆமே.