அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,
அன்பு உடைய மாமனும் மாமியும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,
ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,
துணைஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ,
இறைவன் நீ—ஏறு ஊர்ந்த செல்வன்நீயே.
வெம்ப வருகிற்பது அன்று, கூற்றம் நம்மேல்;
வெய்ய வினைப்பகையும் பைய நையும்;
எம் பரிவு தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்;
எங்கு எழில் என் ஞாயிறு? எளியோம்அல்லோம்—
அம் பவளச்செஞ்சடைமேல் ஆறுசூடி,
அனல்ஆடி, ஆன்அஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவளவண்ணர், செங்குன்றவண்ணர்,
செவ்வானவண்ணர், என் சிந்தையாரே.
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே?
அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே?
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே?
உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே?
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே?
பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே?
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே?
காண்பார் ஆர், கண்ணுதலாய்! காட்டாக்காலே?
நல் பதத்தார் நல் பதமே! ஞாமமூர்த்தீ!
நலஞ்சுடரே! நால்வேதத்து அப்பால் நின்ற
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற
சொலற்கு அரிய சூழலாய்! இது உன் தன்மை;
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்தன்னுள்
நிலாவாத புலால்உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே! யான் உன்னை விடுவேன்அல்லேன்—
கனகம், மா மணி, நிறத்து எம் கடவுளானே!
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும்,
திருவெண்நீறு அணியாத திரு இல் ஊரும்,
பருக்கு ஓடிப் பத்திமையால் பாடா ஊரும்,
பாங்கினொடு பலதளிகள் இல்லா ஊரும்,
விருப்போடு பலதளிகள் இல்லா ஊரும்,
விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும்,
விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்,
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும்,
அவைஎல்லாம் ஊர் அல்ல; அடவி-காடே!
திருநாமம் அஞ்சுஎழுத்தும் செப்பார்ஆகில்,
தீவண்ணர் திறம் ஒரு கால் பேசார்ஆகில்,
ஒருகாலும் திருக்கோயில் குழார் ஆகில்,
உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார்ஆகில்,
அருநோய்கள் கெட வெண்நீறு அணியார்ஆகில்,
அளி அற்றார்; பிறந்தஆறு ஏதோ என்னில்,
பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழில்ஆகி, இறக்கின்றாரே!
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்;
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும்ஆனாய்;
மன்ஆனாய்; மன்னவர்க்கு ஓர் அமுதம்ஆனாய்;
மறைநான்கும்ஆனாய்; ஆறுஅங்கம்ஆனாய்;
பொன்ஆனாய்; மணிஆனாய்; போகம்ஆனாய்;
பூமிமேல் புகழ் தக்க பொருளே! உன்னை,
என் ஆனாய்! என் ஆனாய்! என்னின்அல்லால்,
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே?
அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்;
அருள்நோக்கில்-தீர்த்தநீர் ஆட்டிக்கொண்டாய்;
எத்தனையும் அரிவை நீ எளியைஆனாய்;
எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய்;
பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன்,
பிழைத்தனகள்அத்தனையும் பொறுத்தாய் அன்றே!
இத்தனையும் எம் பரமோ? ஐய! ஐயோ!
எம்பெருமான் திருக்கருணை இருந்தஆறே!
குலம் பொல்லேன்; குணம் பொல்லேன்; குறியும் பொல்லேன்;
குற்றமே பெரிது உடையேன்; கோலம் ஆய
நலம் பொல்லேன்; நான் பொல்லேன்; ஞானி அல்லேன்;
நல்லாரோடு இசைந்திலேன்; நடுவே நின்ற
விலங்கு அல்லேன்; விலங்குஅல்லாது ஒழிந்தேன்அல்லேன்;
வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்;
இலம் பொல்லேன்; இரப்பதே ஈயமாட்டேன்;
என் செய்வான் தோன்றினேன், ஏழையேனே?
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து
தரணியொடு வான் ஆளத் தருவரேனும்,
மங்குவார்அவர் செல்வம் மதிப்போம்அல்லோம்,
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார்அகில்;
அங்கம்எலாம் குறைந்து அழுகு தொழுநோயரா(அ)ய்
ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்,
கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர்ஆகில்,
அவர்கண்டீர், நாம் வணங்கும் கடவுளாரே!