கையது, கால் எரி நாகம், கனல்விடு சூலம்அது;
வெய்யது வேலைநஞ்சு உண்ட விரிசடை விண்ணவர்கோன்,
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி
ஐயனை, ஆரா அமுதினை,—நாம் அடைந்து ஆடுதுமே.
கைத்தலை மான்மறி ஏந்திய கையன்; கனல் மழுவன்;
பொய்த்தலை ஏந்தி, நல் பூதி அணிந்து பலி திரிவான்;
செய்த்தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி
அத்தனை; ஆரா அமுதினை;—நாம் அடைந்து ஆடுதுமே.
முன் பின் முதல்வன்; முனிவன்; எம் மேலைவினை கழித்தான்;
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடிஆன செய்யும்
செம்பொனை; நல் மலர்மேலவன் சேர் திரு வேதிகுடி
அன்பனை; நம்மை உடையனை;—நாம் அடைந்து ஆடுதுமே.
பத்தர்கள், நாளும் மறவார், பிறவியை ஒன்று அறுப்பான்;
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பார்இடம்முன் உயர்ந்தான்;
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி
அத்தனை; ஆரா அமுதினை;—நாம் அடைந்து ஆடுதுமே.
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார்? அவர் கை
மான் அணைந்து ஆடும்; மதியும் புனலும் சடைமுடியன்;
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி,
ஆன்அண்ஐந்துஆடும், மழுவனை;—நாம் அடைந்து ஆடுதுமே.
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய,
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார்;
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்; திரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை;—நாம் அடைந்து ஆடுதுமே.
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம்;
ஆர்ந்த மடமொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான்;
சேர்ந்த புனல் சடைச் செல்வப் பிரான்; திரு வேதிகுடிச்
சார்ந்த வயல் அணி தண்ணமுதை அடைந்து ஆடுதுமே.
எரியும் மழுவினன்; எண்ணியும் மற்றொருவன் தலையுள்-
திரியும் பலியினன்; தேயமும் நாடும் எல்லாம் உடையான்;
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே.
மை அணி கண்டன்; மறை விரி நாவன்; மதித்து உகந்த
மெய் அணி நீற்றன்; விழுமிய வெண்மழுவாள்படையன்;
செய்யகமலம் மணம் கமழும் திரு வேதிகுடி
ஐயனை; ஆரா அமுதினை;—நாம் அடைந்து ஆடுதுமே.
வருத்தனை, வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த
பொருத்தனை, பொய்யா அருளனை, பூதப்படை உடைய
திருத்தனை, தேவர்பிரான் திரு வேதிகுடி உடைய
அருத்தனை, ஆரா அமுதினை,—நாம் அடைந்து ஆடுதுமே.