முத்தினை, பவளத்தை, முளைத்த எம்
தொத்தனை, சுடரை, சுடர் போல் ஒளிப்
பித்தனை, கொலும் நஞ்சினை, வானவர்
நித்தனை,—நெருநல் கண்ட வெண்ணியே.
வெண்ணித் தொல்-நகர் மேய வெண்திங்கள் ஆர்
கண்ணித் தொத்த சடையர்; கபாலியார்;
எண்ணித் தம்மை நினைந்துஇருந்தேனுக்கு(வ்)
அண்ணித்திட்டு அமுது ஊறும், என் நாவுக்கே.
காற்றினை; கனலை; கதிர் மா மணி
நீற்றினை; நினைப்பார் வினை நீக்கிடும்,
கூற்றினை உதைத்திட்ட குணம் உடை,
வீற்றினை;—நெருநல் கண்ட வெண்ணியே.
நல்லனை, திகழ் நால்மறைஓதியை,
சொல்லனை, சுடரை, சுடர் போல் ஒளிர்
கல்லனை, கடி மா மதில்மூன்று எய்த
வில்லனை,—நெருநல் கண்ட வெண்ணியே.
சுடரைப் போல் ஒளிர் சுண்ணவெண்நீற்றனை,
அடரும் சென்னியில் வைத்த அமுதனை,
படரும் செஞ்சடைப் பால்மதிசூடியை,
இடரை நீக்கியை, யான் கண்ட வெண்ணியே.
பூதநாதனை, பூம் புகலூரனை,
தாது எனத் தவழும் மதி சூடியை,
நாதனை, நல்ல நால்மறை ஓதியை,
வேதனை,—நெருநல் கண்ட வெண்ணியே.
ஒருத்தியை ஒருபாகத்து அடக்கியும்
பொருத்திய(ப்) புனிதன், புரிபுன்சடைக்
கருத்தனை, கறைக்கண்டனை, கண்நுதல்
நிருத்தனை,—நெருநல் கண்ட வெண்ணியே.
சடையனை; சரி கோவணஆடை கொண்டு
உடையனை; உணர்வார் வினை தீர்த்திடும்
படையனை, மழுவாளொடு; பாய்தரும்
விடையனை;—நெருநல் கண்ட வெண்ணியே.
பொருப்பனை, புனலாளொடு புன்சடை
அருப்பனை, இளந்திங்கள்அம்கண்ணியான்
பருப்பதம் பரவித் தொழும் தொண்டர்கள்
விருப்பனை,—நெருநல் கண்ட வெண்ணியே.
சூல, வஞ்சனை, வல்ல எம் சுந்தரன்;
கோலமா அருள்செய்தது ஓர் கொள்கையான்;
காலன் அஞ்ச உதைத்து, இருள்கண்டம் ஆம்
வேலைநஞ்சனை; கண்டது வெண்ணியே.
இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார்,
மலையினால் அரக்கன் திறல் வாட்டினார்,
சிலையினால் மதில் எய்தவன், வெண்ணியைத்
தலையினால்-தொழுவார் வினை தாவுமே.