சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்,
வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன்,
கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என,
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே.
வாடி வாழ்வது என் ஆவது? மாதர்பால்
ஓடி, வாழ்வினை உள்கி, நீர், நாள்தொறும்
கோடிகாவனைக் கூறிரேல், கூறினேன்;
பாடிகாவலில் பட்டுக் கழிதிரே.
முல்லைநல்முறுவல்(ல்) உமை பங்கனார்,
தில்லை அம்பலத்தில்(ல்) உறை செல்வனார்,
கொல்லை ஏற்றினர், கோடிகாவா! என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.
நா வளம் பெறும்ஆறு, மன் நன்னுதல்
ஆமளம் சொலி, அன்பு செயின்(ன்)அலால்,
கோமளஞ்சடைக் கோடிகாவா! என,
ஏவள்? என்று எனை ஏசும், அவ் ஏழையே.
வீறுதான் பெறுவார் சிலர்ஆகிலும்,
நாறு பூங்கொன்றைதான் மிக நல்கானேல்,
கூறுவேன், கோடிகா உளாய்! என்று; மால்
ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ?
நாடி நாரணன், நான்முகன், வானவர்
தேடி ஏசறவும், தெரியாதது ஓர்
கோடிகாவனைக் கூறாத நாள்எலாம்
பாடிகாவலில் பட்டுக் கழியுமே.
வரங்களால் வரையை எடுத்தான்தனை
அரங்க ஊன்றி அருள்செய்த அப்பன் ஊர்,
குரங்கு சேர் பொழில் கோடிகாவா! என
இரங்குவேன், மனத்து ஏதங்கள் தீரவே.